புதன், 24 ஜூன், 2009

வருது புதியசட்டம்- செயல்படுமா..?

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் மீது அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர், காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் ஆகியோர் பேசினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவுடனேயே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், இலவச சீருடை போன்றவற்றை வழங்கி இந்த அரசு கல்வியின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறது.

இந் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வருவது கவலை அளிப்பதாக தெரிவித்த முதல்வர் கருணாநிதி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கல்விக் கட்டணங்களில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது ஒரு மோகமாக உருவாகிவிட்டது.

அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றதை குறிப்பிடலாம்.

சுய நிதி கல்வி நிறுவனங்கள் அவர்களே தங்கள் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் இந்த விஷயத்தில் மாநில அரசு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

இப்போதும் கூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

116 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். நிச்சயமாக பள்ளியின் அங்கீகாரம் ரத்து என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழு அமைப்பது, மீறினால் நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட ஷரத்துக்கள் இந்த சட்ட மசோதாவில் சேர்க்கப்படும்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றார் தென்னரசு.

இது தட்ஸ்தமிழ் செய்தி


மக்கள் கருத்து:

ராமசாமி: அட போங்கய்யா..! நீங்கவேற சட்டம் போடுராகலாமுல சட்டம். தனியார் பள்ளிகளை நடத்துவதே அரசியல்வாதிகள்தானப்பா.... அவுகளுக்கு சட்டம் எல்லாம் சக்கரைபொங்கல் மாதிரி இது ஏட்டளவில்தான் இருக்கும்.

அன்வர் : அய்யா.. இலவச பஸ் பாஸ் கொடுக்குறதுனாலய்யோ இலவச சைக்கிள் கொடுக்குறதுனாலயோ கல்வித்தரம் உயர்திராது நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆங்கிலப் பள்ளிகளுக்கு நிகறான தரமான கல்விமுறை
20 மானவர்களுக்கு ஒரு ஆசிரியர் தரமான கட்டட வசதி பள்ளிக்கூட நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் சக ஆசிரியர்களுடன் அரட்டை அடித்துவிட்டு மாலையில் டியூசன் என்ற பெயரால் காசை பிடுங்கும் ஆசிரியர்களை நீக்கிவிட்டு வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தால் கல்வித்தரம் உயரும் தானாகவே பெற்றோர்களுக்கு ஆங்கிலப்பள்ளி மோகம் நீங்கி தமிழ் பள்ளிகள் பக்கம் திரும்பும். அப்போது நீங்கள் சட்டம் எல்லாம் போடவேண்டாம் தனியார்ப் பள்ளிகள் அவர்களாகவே முன்வந்து கட்டணக்குறைப்பு செய்வார்கள் அல்லது மூடிவிட்டு ஓடிவிடுவார்கள்

டேவிட்: மொதல்ல கல்லூரிகள் வைத்திருப்பவர்கள் அமைச்சராக முடியாதுன்னு சட்டம் போடுங்க. அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு அந்தக்காலத்திலெல்லாம் கல்விச்சாலைகள் திறந்தவர்கள் சேவை மனப்பான்மையோடு திறந்தனர் இப்பொழுது தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வியாபாரம் கல்விதான்... காலம் கெட்டுக்கெடக்கு சாமி.. அய்யா எங்களுக்கு டிவி வேணாம், கேஸ் அடுப்பு வேணாம், தரமான கல்வி முதல்வகுப்பு தொடங்கி கல்லூரிப்படிப்பு வரை இலவசமாக ஆக்குங்கள் காலம் உங்களை வாழ்த்தும்.

அமெரிக்காவில் ஆவி பிடிக்கத் தடை...?

இளைஞர்களிடையே நிலவும் புகை பிடிக்கும் பழக்கத்திற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.

குடும்ப புகை பிடித்தல் தடை மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற பெயர் கொண்ட இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை அந்நாட்டு உணவு மற்றும் மருந்துத்துறை மேற்கொள்ளும்.

இந்த சட்டத்தின் மூலம் இளைஞர்களை அதிகம் கவரும் வாசனையான சிகரெட் மற்றும் சிறிய வகை சிகரெட்கள் தடை செய்யப்படும்.

மேலும், லைட்ஸ், மைல்ட் என்ற பெயரில் வெளி வரும் சிகரெட்களுக்கும் தடை விதிக்கப்படும். இதுதவிர புகையிலைப் பொருட்கள் மீது கண்டிப்பாக இனி எச்சரிக்கை வாசகங்களையும் பொறிக்க வேண்டும்.

அதேபோல இனிமேல் தயாரிக்கப்படும் சிகரெட்களில் நிக்கோடின் அளவையும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் நடந்தது.

அப்போது ஒபாமா பேசுகையில் பல காலமாகவே நாம் எதிர்பார்த்து வந்த மாற்றத்தை இந்த சட்டம் தரும். நமது குழந்தைகளை அபாயத்திலிருந்து காக்க இந்த மாற்றம் வந்துள்ளது என்றார்.

அமெரிக்காவில் புகை பிடிக்கும் பழக்கத்தால் பலர் இறக்கிறார்கள். இறப்பு அளவு குறைந்த போதிலும் கூட ஆண்டுக்கு 4 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆண்டுதோறும் செலவழிக்கும் தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அரசின் இந்த சட்டத்தை பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஆல்ட்ரியா குரூப் வரவேற்றுள்ளது. இருப்பினும் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீய அம்சங்கள் குறித்து இளைஞர்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என இது கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் மால்போரோ, விர்ஜீனியா ஸ்லிம்ஸ், பேசிக், செஸ்டர்பீல்ட் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்க இளைஞர்களிடையே கணிசமான அளவுக்கு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

52 சதவீதம் பேர் இதை எதிர்த்துள்ளனர். 46 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஒபாமா இப்படிச் சொன்னார் - சிகரெட்டை கைவிடுவது என்பது இளைஞர்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். நானும் ஒரு காலத்தில் டீன் ஏஜில் இருந்தவன்தான். இருப்பினும் முயன்றால் முடியாதது இல்லை என்றார் ஒபாமா.

சனி, 13 ஜூன், 2009

மதுரையில் அயல்நாடு தொழிலாளர் நல அமைப்பு தொடக்கம்

மதுரை : மலேசியாவில் வேலை பார்ப்போரின் துயரங்களைத் தீர்ப்பதற்காக அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற ஒன்று மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் கூட்டத்தி்ல ஏராளமானோர் கலந்து கொண்டு தாங்கள் வெளிநாடுளில் பட்ட கஷ்டங்களையும், தங்களது குடும்பத்தினர் பட்ட, பட்டு வரும் துயரங்களையும் கண்ணீருடன் விளக்கினர்.

இவர்களில் பலரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அனிதாகுமாரி என்பவரின் கணவர் ரவி கடந்த 2006ம் ஆண்டு ஏஜென்டு மூலம் மலேசியா போனார். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு மனைவியைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், தன்னை சித்திரவதை செய்கிறார்கள் என்று கூறி கதறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையாம்.

கணவரை மீட்க கோரி மத்திய அமைச்சர் வயலார் ரவி உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். ஒரு மகள், மகனுடன் கண்ணீரும் கம்பலையுமாக கணவரை நினைத்து வேதனையில் மூழ்கியிருக்கிறார் அனிதா குமாரி.

கொய்யாவை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர்...

திருவாரூர் மாவட்டம் சிறுபுலியூரைச் சேர்ந்த வினோத்தின் கதை கொடுமையானது. போலி பாஸ்போர்ட் மூலம் இவரை ஏஜென்ட் ஒருவர் மலேசியா வுக்கு அனுப்பி விட்டார்.

அங்கு போனதும்தான் தான் போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிய வந்திருக்கிறது வினோத்துக்கு. சாப்பாடு கூட தராமல் கொடுமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மலைப் பகுதியில் கிடைத்த கொய்யாப் பழங்களைப் பறித்து அதை சாப்பிட்டு ஜீவனம் நடத்தி வந்துள்ளார் வினோத்.

எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் கூட கொடுமைகள் தொடர்ந்துள்ளன. சரியாக தூங்கக் கூட விடாமல் வேலைவாங்கியுள்ளனர். பெரும் சிரமத்திற்குப் பின்னர் விட்டால் போதும் என்று தாய் மண்ணுக்கே திரும்பி விட்டார் வினோத்.

இவர்களைப் போல கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தி்னர் வேலை பார்க்கும் இடங்களிலும், சிறைகளிலும் கொடுமைக்குள்ளாகி வருகின்றனராம். இவர்களை மீட்கவும், அங்கு போய் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கவும், மத்திய அரசும், மாநில அரசும் சற்று அக்கறை காட்ட வேண்டும் என்கிறது அயலக தொழிலாளர் நல அமைப்பு.

நன்றி : தட்ஸ் தமிழ்

புதன், 10 ஜூன், 2009

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.- ஐ.நா.


கடந்த 2008 டிசம்பர் மாதம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் குழந்தைகள் உட்பட 1350 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சுமார் 5400 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குலை விசாரித்த ஐ.நா விசாரணைக் குழு இஸ்ரேல் போர் குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
யூத மத நீதிபதி ரிச்சர்ட் கோல்ட் ஸ்டோண் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த விசாரணைக் குழு தாக்குதலைப் பற்றிய செய்திகள் மற்றும் புகைப் படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இஸ்ரேலின் அத்து மீறலை உறுதி செய்துள்ளது.

மேலும் பல பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசியது. பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் ஐ.நா. தலைமையகம் உட்பட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியதைப் பற்றி இஸ்ரேல் தெளிவான பதிலொன்றையும் சமர்ப்பிக்கவில்லை.

மேலும் இஸ்ரேலின் அத்து மீறல் சம்பந்தமான பல ஆதாரங்களை விசாரணைக் குழு முன்பாக ஹமாஸ் இயக்கமும் அளித்திருக்கின்றது.

எல்லாமே இலவசம்...?

சேலை வாங்கினால் கைக்குட்டை இலவசம். மாடுவாங்கினால் கன்றுக்குட்டி இலவசம். இது வழமையாக கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் நம் தங்கத்தமிழகத்திலோ என்னை ஆட்சியில் அமரவைத்தால் அரிசி முதல் அல்வா வரை இலவசம். இலவசப் பொருட்கள் உன்மையிலேயே ஏழைகளுக்கு பயனளிக்கிறதா..?.

அன்மையில் பாராளுமன்றத்திலே லால்லு பிரசாத் அவர்கள் பேசினார். அரசு வழங்கும் இலவசப்பொருட்களினால் ஏழைகள் பயனடைவது இல்லை. மாறாக அரசியல்வாதிகள் தான் பயன் அடைகிறார்கள். நீங்கள் இலவசமாக வழங்கும் அரிசியை வடித்து வைத்துக்கொண்டு என்னசெய்வது அதற்கு ஊற்றிக்கொள்ள யார் கொடுப்பார்கள். என்று அவருக்கெ உரிய லொல்லுடன் பேசினார்.

" நீ பசித்திருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாக வழங்குவதை விட நீ அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு அது அவனுக்கு அனுதினமும் சோறு போடும்" இது சீனப் பழமொழி இது ஏன் நம் தமிழக அரசியல் தழைவர்களுக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகள் தான் கொடுக்கிறார்கள் என்றால் இந்த மக்கள் ஏன் மயங்கினார்கள். இது நம் நாட்டிற்க்கு ஆரோக்கியமானதல்ல இலவசத்தை விட்டுவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குங்கள். அனைவருக்கும் வேலை என்ற நிலை வந்துவிட்டால். சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிச்செல்லலாம் நாம். இதற்கு தடைக்கற்களாக இருக்கும் இலவசம் என்னும் பிச்சையை..? நாம்தான் தடுக்கவேண்டும். ஆம் நம் காசை வாங்கிக்கொண்டு நமக்கே பிச்சைபோடுகிறார்கள். அய்யா...... ஒரு தொலைக்காட்சிப்பெட்டி எம்புட்டு காசு இன்னக்கெல்லாம் ரூ.1500 வரும் அத இலவசமா வாங்கிக்கிட்டு மல்லாக்க படுத்துக்கிட்டு சீரியல் பாக்குறோம். ஆனா நாம் அன்றாடம் பயன்படுத்தும் பஸ்கட்டணம்,மளிகை பொருட்கள்,மின்கட்டணம், இன்னும் எத்தனை எத்தனையோ கட்டணங்களை குறைத்தால் (இலவசமாக அல்ல) ரூ 1500 என்ன ரூ10000 க்கே சொந்தமா தொலைக்காட்சிப்பெட்டி வாங்கலாமே..?. இது ஆரம்பம் தான் இது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால்.... இனி வரும் காலங்களில் குடிமகன்களுக்ககு போத்தல் இலவசம், புகைமகன்களுக்கு பாக்கெட் இலவசம் என்பார்கள் எச்சரிக்கை "விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொல்வார்"

ஞாயிறு, 31 மே, 2009

உலகத் தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்..!!


ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும் என்று அதிரிட்டுக் கூறுகிறார் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. இராமசாமி.

“பிரபாகரன் வீரச்சாவடைந்தாரா, உயிரோடு உள்ளாரா?? என்பதுதான் இன்றைய நிலையில் உலகத்தமிழர்களால் உற்று நோக்கப்படும் விடயமாக உள்ளது”, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இராமசாமி விடுத்துள்ள முழு அறிக்கை:


“புலிகளை வென்று விட்டதாக கூறி வெற்று மாயையை நம்பி கும்மாளமடிக்கும் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள “பிரபாகரனின் உடல்” படங்கள் முற்றிலும் கேலிக்குரியது, கோமாளித்தனமானது.

கடந்த மே 18-ஆம் தேதி இலங்கை இராணுவம் பிரபாகரனையும் மற்றும் பல முக்கிய தளபதிகளையும் வெற்றிகரமாக கொன்று விட்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு கொண்டாடியது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின், புலிகளின் அனைத்துலக செய்தித்தொடர்பாளர் க.பத்மநாபன், புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17-ஆம் தேதி நடந்த சமரில் வீரமரணம் அடைந்ததாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளில் தெரியும் முரண்பாடுகளை காணும்போது இந்த செய்திகளெல்லாம் வெறும் வதந்திகளாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுவதன் மூலம் புலிகளின் இயக்கத்தை உடைக்க இலங்கை இராணுவம் செய்யும் சதி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. புலிப்போராளிகளை உளவியல் மூலமாக பலவீனப்படுத்தும் அதே வேளை, அனைத்துலக நாடுகளிடம் இருந்து தமிழர் பகுதிகளில் மீழ்கட்டமைப்பு என்ற சாக்கில் பொருளுதவிகளை பெறுவதற்காகவும், இலங்கை இனவெறி அரசு இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகிறது என்பது மட்டும் திண்ணம். அதே வேளையில், தலைவர் பிரபாகரன் உடல் என்று கூறி சிங்கள இராணுவம் காட்டும் உடல் பிரபாகரனுடையுதுதானா என்ற சந்தேகமும் உலகத்தமிழர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. கண்டிப்பாக அது பிராபகரனுடைய உடலாக இருக்காது என்பதுதான் அனைவரது நம்பிக்கையும் கூட.

புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனின் அறிக்கையும், உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள இராணுவம் பிரபாகரன் மரணம் என்று அறிவித்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பிறகு பத்மநாபனின் அறிக்கை வெளிவந்துள்ளது மிகப்பெரும் முரண்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் புலிகள் எப்பொழுதுமே தங்களது போராளிகளின் வீரமரணத்தை பற்றிய அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இம்முறை ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பின்புதான் க.பத்மநாபன் அறிவிக்கிறார், புலிகளின் தலைவரும், தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள் என்று.

இந்த ஒரு முரண்பாடே, உலக தமிழர்கள் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தி விட்டது. அப்படி, தலைவரும் அவர்தம் குடும்பத்தினரும், மூத்த தளபதிகளும் உண்மையிலேயே வீரமரணம் அடைந்திருப்பார்கள் என்றால், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? அவர்களின் உடல்கள் எங்கே?

பெரும்பாலானோர் நம்புவதைப் போல் புலிகளின் தலைவர் பிரபாகரன், சுமார் 300 போரளிகளோடு, இறுதிக்கட்ட தாக்குதலுக்கு மூன்று வாரங்கள் இருக்கும் போதே போர் சூன்ய பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறான செய்திகளில் களத்திலிருக்கும் போரளிகளிடமிருந்து வருவதால், இந்த செய்திகள் உண்மையாகவே இருக்கக்கூடும். தமிழகத்தலைவர்கள் வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரும் இதையே கூறுகின்றனர். தலைவர் பிரபாகரன் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அவர்கள் மிக அழுத்தமாக கூறுகின்றனர். அதுதான் உண்மை என்று நாமும் நம்புவோம்.

தலைவர் பிரபாகரன் அவர்கள், 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை, உலகத்தமிழர்களின் மத்தியில் மிக ஆழமாக வேருன்றியுள்ளது. 5-ஆம் கட்ட ஈழப்போருக்கான ஏற்பாடுகளை தலைவர் முன்னெடுத்து, தானே இம்முறையும் போரை முன்னின்று நடத்துவார் என்றே தெரிகிறது.

இதற்கிடையில், பிரபாகரனைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ளதொடர்பை பற்றிய கேள்விகளும் எழவே செய்கிறது. பிரபாகரனைப் பற்றிய கே.பத்மநாபனின் அறிவிப்பிற்கும் இந்தியாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று உலகத்தமிழர்கள் மத்தியில் பலமான சந்தேகம் இருக்கவே செய்கிறது.

இலங்கை இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் மேல் தொடுத்த மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை இந்தியாதான் முழுமூச்சாக ஆதரித்தது என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். ஈழப்போரை, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் களமாக இந்தியா ஆக்கிவிட்டிருந்தது என்பது தெள்ளத்தெளிவான விடயம். புலிகள் 5-ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுத்து ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவார்கள் என்பதும் இந்தியாவிற்கும் தெரியும்,

ஆகவே புலிகளை வைத்துக்கொண்டு சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படுத்துவதை இந்தியா விருமபவில்லை. ஆகவே, அவசர,அவசரமாக புலிகள் தலைமை அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் அல்லாத தமிழர்களான டக்ளஸ் தேவனந்தா, ஆனந்த சிவசங்கரி ஆகியோரை முன்னிறுத்தி ஓர் சமரச உடன்படிக்கை அல்லது அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த விரும்பியிருக்கக்கூடும். இந்தியாவின் இந்த இராசத்தந்திர சதியில் க.பத்மநாபனும் விழுந்து விட்டாரா என்ற கேள்வி பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களிடம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பற்றி பேசுவதற்கு, அவர்களின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. புலிகளை தமிழர்களின் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ளாத இந்தியா, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழமக்களின் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் பேசுவதற்கு மறுப்பது ஏன் என்ற வினா உலகத்தமிழர்களின் ஒட்டு மொத்த கேள்வியாகும். ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகத்தான் எந்தவொரு அதிகாரப்பகிர்வு யோசனையும் முன்னெடுக்கப்பட வேண்டும். எப்பொழுதுமே ஈழத்தமிழர்களுக்கு உடன்பாடில்லாத டக்ளஸ் தேவனந்தாவுடனோ, ஆனந்த சிவசங்கரியுடனோ, அல்லது துரோகி கருணாவோடோ எந்தவொரு பேச்சுகளும் நடைப்பெறக்கூடாது என்பதுதான் புலம்பெயந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் கருத்தும் கூட.

இறுதியாக, பிரபாகரன் என்ற மாவீரன் பற்றி வரும் செய்திகளில், பல செய்திகள் வெறும் வதந்திகள் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். இப்பொழுது இருப்பதை விட பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து வந்தது தமிழீழப் போராட்டம்.

அவ்வாறான பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் கடந்து தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன். ஆகவே, இப்பொழுது நிகழும் இந்த குழப்பமிகுந்த சூழ்நிலையையும் கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் பிரபாகரன் முன்னெடுப்பார் என்று தாராளமாக உலக்த்தமிழர்கள் நம்பலாம்.

மரணத்தை வென்ற மாவீரன் பிரபாகரன். பிரபாகரனுக்கு மரணமே கிடையாது. என்றென்றும் தமிழர்களின் மனதிலெல்லாம் அவர் வாழ்ந்துக்கொண்டுதானிருப்பார். பூமிப்பந்தில் தமிழர் என்ற இனம் உள்ளவரை பிரபாகரனின் புகழை சரித்திரங்கள் பாடும். ஆகவே, உலகத்தமிழர்கள் அனைவரும், குறிப்பாக மலேசியத்தமிழர்களான நாம், ஈழத்தமிழர்களுக்கு நம்மால் ஆன உதவிகளயெல்லாம் செய்து, அவர்களின் வாழ்வுரிமை போராட்டம் வெற்றிப்பெற உறுதுணையாக இருப்போமாக.”

நன்றி: மலேசியா இன்று.

செவ்வாய், 26 மே, 2009

பாலியல் - ஓர் இஸ்லாம் பார்வை

இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:

1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு

முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

'உலகமயமாக்கல்' எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.

உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும்

மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:

1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.
2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்

ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

1. சினிமா
2. தொலைக்காட்சி
3. வானொலி
4. இன்டர்நெட்
5. பொப் பாடல்கள்
6. சஞ்சிகைகள்
7. விளம்பரங்கள்
8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)
9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)

இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.
ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
2. சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு
3. கருக்கலைப்பு
4. கற்பழிப்பு
5. தன்னினச்சேர்க்கை
6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்
7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்
8. விவாகரத்து
9. தற்கொலை
10. போதைவஸ்துப் பாவனை

இன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஸ்லாமிய நோக்கில் பாலியல்

ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.

அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.'' (51:49)

''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)

திருமணம், துறவறம், விபசாரம்

மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

இன்றைய சமயசார்பற்ற - சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.

மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.

இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் - பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை 'ஸினா' (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

''நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.'' (17:32)

விபச்சாரத்திற்கு வழிவகுப்பவை

இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:

1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.' (அஹ்மத்)
'உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.' (புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)

2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

'அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.' (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
'இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)

3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்

அவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.

இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.

இஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:

1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.
3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.
4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.
5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.
6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.
7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.
8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது
''நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (30:21)

குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்

இல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

துர்நடத்தை

விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் - பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.

ஓரினச்சேர்க்கை

ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)

மனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.

விபசாரம்

ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் - பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
'ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்;வின் பேரருளாகும்.

நன்றி: www.sheikhagar.org