புதன், 8 ஜூலை, 2009

அடுத்து ஆட்சிசெய்வது யார்..?


இந்தோனிசியாவில் இன்று அதிபர் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. சுகார்த்தோவின் சர்வாதிகார ஆட்சி வீழ்ச்சி அடைந்த பின்னர் நிகழும் இரண்டாவது நேரடி அதிபர் தேர்தல் இதுவாகும்.நடப்பு அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோ மீண்டும் தேர்வு செய்யப்படுவது திண்ணம் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டியுள்ளன.

அவரது வெற்றி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அந்த நாட்டில் நிர்வாகச் சீர்திருத்தங்களை அமலாக்கி ஊழலை துடைத்தொழிப்பதற்கு அவர் தொடங்கியுள்ள போராட்டத்திற்கு வலுவூட்டும்.

அந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவியுமான மெகாவத்தி சுகார்னோ புத்ரியும் துணை அதிபர் யூசோப் காலாவும் அவருடன் போட்டியிடுகின்றனர்.

அவர்களுடன் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பைத் தவிர்ப்பதற்கு போதுமான வாக்குகளைப் பெற முடியும் என்று யுதயோனோ நம்பிக்கை கொண்டுள்ளார்.

அந்த நாட்டில் கிழக்குக் கோடியில் உள்ள பாப்புவா மாநிலத்தில் முதலில் வாக்களிப்பு தொடங்கியது. மாலை ஆறு மணிக்கு நாடு முழுவதும் வாக்களிப்பு முடிவுக்கு வரும்.

234 மில்லியன் மக்கள் வாழும் அந்த நாட்டில் வாக்களிப்பை ஒட்டி ஆயிரக்கணக்கான போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை வாக்காளர் பட்டியலில் இல்லாத ஆனால் அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும் மக்களும் வாக்களிக்கலாம் என்று எதிர்பாராத தீர்ப்பை வழங்கியது.

அதனால் வாக்காளர் எண்ணிக்கை கூடியுள்ளது.

இந்தோனிசியா தென்கிழக்காசியாவில் பெரிய பொருளாதாரம் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அது நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

ஊழல், உணவுப் பொருள் விலைகள், உலக மயத்தை இந்தோனிசியா எதிர்கொள்வது ஆகியவை தேர்தல் பிரச்சாரத்தில் எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்கள் ஆகும்

நன்றி; மலேஷியா இன்று