வியாழன், 26 மார்ச், 2009

துபாய் கணவன்..


வாழ்க்கைப் பட்டமரமாய் போன,

பரிதாபம் புரியாமல்,

ஈச்சமரம் பக்கம் நின்று,

எடுத்தபுகைப்படம்அனுப்புகிறாய்..! - நீ


இழுத்து செல்கின்ற பெட்டியோடு,

ஒட்டியிருக்கிறது என் இதயம்..!

அனுமதிக்கப்பட்ட எடையோடு,

அதிகமாகிவிட்டதால் ,

விமான நிலையத்திலேயே,

விட்டுவிட்டாயோ..?

என் இதயத்தை..!


திரும்பி வந்துவிடு

என் கணவா.!

என் துபாய் கணவா.!!

வாழ்வின் அர்த்தம்,

புரிந்து வாழலாம்!


சத்தமில்லாமல்,

சமையலறை நுழைந்து,

முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்..!

என் பசி மறந்து உனக்காக,

காத்திருக்கும் பொழுது,

காத்திருக்க வேண்டாமென,

கண்டித்து விட்டு..

ஒரு கையால்

இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!


சாதிச் சான்றிதழுக்காக,,

லஞ்சம் கொடுத்துவிட்டு,

கெஞ்சுபவனைப் போல...

மல்லிகைப்பூ தந்துவிட்டு,

மன்றாடுகிறாய்.!,


பள்ளிக்கு செல்லமறுத்து,

தூங்குவதாய் நடிக்கும்,

சின்னப்பையனை போல,

மடியில் படுத்துக்கொண்டு,

எழ மறுக்கிறாய்..!,


அம்மா வருவதாக,

பாசாங்கு செய்யும்பொழுது....

பதறி எழுந்து,

நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !


கை இழுத்து வைத்து

குளிக்கவைக்க முயலும்போது

குளிரடிப்பதாய் கூறி -ஒரு

குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்....

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்..?


கெஞ்சுவதும்...மிஞ்சுவதும்...

அழுவதும்...அணைப்பதும்...

கண்டிப்பதும்...கண்ணடிப்பதும்...

இடைகிள்ளி...நகைஅல்லி...

அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி..!


இவையெல்லாம்

இரண்டே மாதம்தந்துவிட்டு...

எனை தீ தள்ளி

வாழ்வள்ளி சென்றுவிட்டாய்..!

என் கணவா..!

என் துபாய் கணவா..!!


கணவா...எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்...

கனவுகளோடு இருபத்திஇரண்டு மாதமா...?


12வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5வருடமொருமுறை ஒலிம்பிக்....

4வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்.... ...

2 வருடமொரு முறைகணவன் ...

நீளும் பட்டியலோடு,

நீயும் இணைந்து கொண்டாய்!


இதுவரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்...

முகச்சாயம் பூசுவோர் உண்டோ?

கண்களின் அழுகையை...

கண்ணாடி தடுக்குமா..?


நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ

கிணறுவெட்டுகிறாய்

நான்மோகத்தில்நிற்கிறேன் - நீ

விசாவைக் காட்டுகிறாய்..!

திரும்பிவந்துவிடு,

என் கணவா.!

என் துபாய் கணவா..!!


வாழ்வின் அர்த்தம்புரிந்து வாழலாம்

விட்டுக் கொடுத்து...

தொட்டு பிடித்து...

தேவை அறிந்து...

சேவைபுரிந்து..

உனக்காய் நான் விழித்து...

எனக்காக- நீ

உழைத்து தாமதத்தில் வரும் தவிப்பு...

தூங்குவதாய் உன் நடிப்பு...


வார விடுமுறையில் பிரியாணி...

காசில்லாநேரத்தில் பட்டினி...ٌ

இப்படி காமம் மட்டுமன்றி

எல்லா உணர்ச்சிகளையும்

நாம் பரிமாறிக் கொள்ளவேண்டும்.

இரண்டு மாதம்மட்டும்,

ஆடம்பரம் உறவு உல்லாசபயணம்.

பாசாங்கு வாழ்க்கை

புளித்துவிட்டது..

என் கணவா!

என் துபாய் கணவா..!!


தவணை முறையில்வாழ்வதற்கு

வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு - நீ

என்ன பாலை மழையா?

இல்லை

ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா..!


விரைவுத்தபாலில்

காசோலை வரும்..!

காதல் வருமா.?

பணத்தை தரும் பாரத வங்கி.!

பாசம் தருமா? - நீ

இழுத்து செல்கின்றபெட்டியோடு

ஒட்டியிருக்கிறது என் இதயம்

அனுமதிக்கப்பட்ட எடையோடு

அதிகமாகிவிட்டதால்

விமான நிலையத்திலேயே

விட்டுவிட்டாயோ என் இதயத்தை?


பித்தளையை எனக்கு

பரிசளித்துவிட்டு - நீ

தங்கம் தேடி துபாய் சென்றாயே?

பாலையில் - நீ

வறண்டது என் வாழ்வு!


வாழ்க்கை பட்டமரமாய் போன...

பரிதாபம் புரியாமல் ஈச்சமரம்

பக்கம் நின்று எடுத்த

புகைப்படம் அனுப்புகிறாய்!


உன்துபாய் தேடுதலில்...

தொலைந்து போனது - என்

வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா!

விழித்து விடு -அந்த

கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!


விசாரித்துவிட்டு போகாதே கணவா

விசா ரத்துசெய்துவிட்டு வா!

திரும்பி வந்துவிடு

என் கணவா.!

என் துபாய் கணவா!

வாழ்வின்அர்த்தம் புரிந்துவாழலாம்..!!



ஹைதர் துபை

2 கருத்துகள்:

  1. கவிதை மிகவும் அருமை. ஆனால் எந்த பெண் இப்படி சொல்லுவாள் ???
    நாமாக கற்பனை செயத்தாலேயோலிய எந்த பெண்ணும் இப்படி நினைக்கமாட்டாள்
    இதுதான் உண்மை.

    அன்புடன்
    மகாராஜா

    பதிலளிநீக்கு
  2. அன்பு நன்பர் மஹாராஜா... கவிதை என்பதே கற்பனை தானே. இருப்பினும் இதில் எவ்வளவு உன்மை இருக்கிறது என்பது கனவனைப் பிரிந்து வாழுன் பென்களுக்குதான் தெரியும். மேழும் வருகைதந்து கருத்துறைத்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு